கரும்பூஞ்சை; தாக்கப்பட்டு தமிழகத்தில் ஒருவர் பலி!

by Editor / 20-05-2021 12:25:02pm
கரும்பூஞ்சை; தாக்கப்பட்டு தமிழகத்தில் ஒருவர் பலி!

கோவில்பட்டி அருகே கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரும்பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கி உள்ளது.இந்நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் முதல் பலி பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயது வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று (மே 20) உயிரிழந்துள்ளார்.சென்னையில் 5 பேர்சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள் கரும்பூஞ்சை நோயின் தாக்கத்தால், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு, அவர்கள் 5 பேருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via