விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள் - திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள்!

by Editor / 25-05-2021 11:20:41am
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள் - திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள்!

மத்திய அரசு கொண்டுவந்த விவசாய விரோத புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயச் சங்கத் தலைவர்களுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்ந்து காலத்தைக் கடத்தியே வருகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவரும் நிலையிலும், விவசாயிகள் தங்களின் கோரிக்கையில் உறுதியுடன் நின்று போராடி வருகிறார்கள். கொரோனாவால் விவசாயிகள் போராட்டத்தையே மறந்துவிட்ட மத்திய அரசுக்கு நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையில், மே 26ம் தேதி அன்று நாடு தழுவிய கருப்பு தினப் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் மே 26ம் தேதிதான் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார் என்பதாலும், அவர் பதவி ஏற்று அன்றோடு ஏழு வருடங்கள் ஆவதால், அந்த தேதியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் போராட்டத்தை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆரவு தெரிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு இதற்கு விவசாயச் சங்கங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via