உள்நாட்டு விமானக்கட்டணம் உயர்வு!
உள்நாட்டு விமான கட்டணத்தை 13 முதல் 16 விழுக்காடு அளவுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியிருக்கிறது. கொரோனா 2ம் அலை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதையடுத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவ உள்நாட்டு விமான கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 விழுக்காட்டில் இருந்து 16 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி 40 நிமிடத்திற்கு உட்பட்ட விமான பயணத்திற்கான போக்குவரத்து கட்டணம், 2,300 ரூபாயில் இருந்து 2,600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 நிமிடத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு பயணத்திற்கான குறைந்தபட்ச விமான கட்டணம் 2,900 ரூபாயில் இருந்து 3,300 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் விமான கட்டண வரவு விகிதங்கள் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில் மூன்றே மாதங்களில் தற்போது விமான கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Tags :