இறைவனுக்கு முடி காணிக்கை... ஏன், எதற்கு?

by Editor / 24-07-2021 09:58:00am
இறைவனுக்கு முடி காணிக்கை... ஏன், எதற்கு?

இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முடி காணிக்கை செலுத்துவதால், நம்முடைய அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது. தங்களுடைய இஷ்ட தெய்வத்துக்கு இப்படி காணிக்கை செலுத்துவதால், தங்கள் மனதில் உள்ள பாரமெல்லாம் இறங்கிவிடுவதாக பக்தர்கள் மனப்பூர்வமாக நம்புகின்றனர். முதன்முதலில் முடி காணிக்கை செலுத்தியது யார் என்பதையும், அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மைகளைப் பற்றியும் பார்ப்போமா?

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் சோழ தேசத்தின் தளபதியாகப் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் மானக்கஞ்சாறர் என்னும் சிவ பக்தரும் வாழ்ந்து வந்தார். அவருடைய மகளைத் திருமணம் செய்ய விரும்பினார் ஏயர்கோன் கலிக்காமர். திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணநாளும் வந்தது.

அன்று மானக்கஞ்சாறர் வீட்டுக்கு ஒரு சிவனடியார் வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்து கொண்டார். மானக்கஞ்சாறர், மணப்பெண்ணாகிய தன் மகளை சிவனடியாரின் காலில் விழுந்து ஆசிபெறுமாறு கேட்டுக்கொண்டார்.

மணப்பெண்ணும் சிவனடியார் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது அப்பெண்ணின் நீண்ட கூந்தலை நோட்டமிட்ட சிவனடியார் "பஞ்சவடி செய்ய எனக்கு இந்த கூந்தல் தேவைப்படுகிறது கிடைக்குமா?" என்று கேட்டார். அதீத சிவ பக்தரான மானக்கஞ்சாறரும் மணநாள் என்றும் பாராமல் மகளின் சம்மதத்துடன் அறுத்துக் கொடுத்துவிட்டார்.

அந்த நேரம் சரியாக , மணமகனும் அங்கு வந்தார். கூந்தல் இல்லாமல் குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். சிவனடியாருக்காகவும் பெற்றோரின் வார்த்தைக்காகவும் பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக நினைக்கும் கூந்தலையே தியாகம் செய்தவள். இவளைவிட சிறந்த பெண் எனக்கு எங்கு சென்றாலும் கிடைக்க வாய்ப்பில்லை' என்று மகிச்சியுடன் கூறினார் . திருமணம் சிறப்பாக முடிந்தது. இதில் இருந்துதான் முடியைக் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

குழந்தைகள் முடி காணிக்கை செலுத்துவது எதற்காக?

இந்தப் பிறப்பில் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் குழந்தை, முன் ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பைத் துண்டிக்கவே முடி காணிக்கை செலுத்தப்படுகிறது. குழந்தைக்கு முதன்முறையாக மொட்டை போடுவது `சூடாகர்ம சமஸ்காரம்’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பின்பு இந்தச் சடங்கை செய்ய வேண்டும். பிறகு மூன்று வயதிலோ ஐந்து வயதிலோ செலுத்தலாம். இரட்டைப் படை வயதில் செய்யக்கூடாது. மொட்டை போட்டவுடன் குழந்தையின் தலையில் குழந்தையின் தந்தை சந்தனம் பூச வேண்டும்.

இதற்குப் பின்னால் சொல்லப்படும் அறிவியல் காரணங்கள்:

பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது கழிவுகளில் உழன்றிருக்கும். இதன் விளைவாக குழந்தைகளுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து பிள்ளைகளைக் காக்கவே குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துகிறோம். இதனால் முடியின் வேர்க்கால்களின் வழியாகக் கழிவுகள் வெளியேறிவிடும். இதனால்தான் குழந்தை பிறந்த சில மாதங்களில் குலதெய்வ கோயில்களில் முடி காணிக்கை செலுத்துமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை காப்பதற்காகவே.

தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தைக் குறிக்கும் ஒன்றாகும். மொட்டை அடிப்பதன் மூலம், தான் என்னும் கர்வத்தை இழந்து கடவுளுக்கு அருகில் செல்கிறோம். இது கடவுளிடம் நமக்கு இருக்கும் பணிவை வெளிப்படுத்துவதாகும். மேலும் ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல், கடவுளை அடையக் கூடிய முயற்சியாகும். கடவுளுக்கு முன் எதுவுமே பெரிதல்ல. இது நமக்கு ஒரு ஞான அறிவைத் தருகிறது. இதனால்தான் முடி காணிக்கை செலுத்துவதை ஒரு முக்கிய சடங்காக நாம் பின்பற்றுகிறோம்.

மொட்டை அடித்தால் உடலில் என்ன நடக்கும்?

மரத்தில், செடியில் கிளையில் உள்ள இலைகளை கழித்துவிட்டால் மரமோ செடியோ அதன் சக்தியை இலைகள் இல்லாத இடத்துக்குத் திருப்பி இலைகள் மீண்டும் வளரும்படி தன் ஆற்றலை பாய்ச்சும்.

அதுபோல, மொட்டை அடித்தால், உடலும் அந்த இடத்தில் தன் ஆற்றலை பாய்ச்சி சற்று உறுதியான, ஆரோக்கியமான முடியை வளர வைக்கும். முன்பு இருந்தது போல இல்லாமல் முடி அடர்த்தியாகவே வளரும் என சில ஞானிகளால் சொல்லப்படுகிறது.

மொட்டை அடிப்பதால் நன்மையா?

நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை தூண்டப்பட மொட்டை அடிக்கும் பழக்கம் உதவுகிறது.

இதனால் மூளை வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், நிருபிக்கப்படவில்லை.

குழந்தைக்கு பல் வளரும்போது மொட்டை அடிக்கலாம் எனும் பழக்கம் தொடர்கிறது. பல் வளர்ச்சி இருக்கும்போது உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். இந்த தருணங்களில் மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்கால்ப் (மண்டைத் தோலில்) உள்ள தொற்றுகள், பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவை மொட்டை அடிப்பதால் நீங்குகின்றன.

இதனால் முடி வளர மிகவும் உதவுகிறது.

வெயில் காலங்களில் முடி எடுப்பதால், வியர்த்தலால் ஏற்படும் பிரச்னைகளும் தடுக்கப்படுகின்றன.

மொட்டை அடித்த பிறகான சில காலம் வரை தலையைப் பராமரிக்க எளிது. பேன், தொற்றுகள் ஆகியவை இருக்காது.

அறிவியல் நன்மைகளும் காரணங்களும்…

விட்டமின் டி சத்து எளிதில் கிடைக்க உதவுகிறது. இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும்.

மொட்டை அடிப்பது தவறு இல்லை. இதில் நன்மைகள் இருக்கின்றன.

குழந்தையின் முடி மிக மெலியதாக இருக்கும். மொட்டை அடித்த பின் திக்காக வளரும்.

எப்போது மொட்டை அடிக்கலாம்?

9 மாதம், 11 மாதம், 1 வயது, 3 அல்லது 5 வயதில் மொட்டை அடிக்கலாம்.

 

நீங்கள் மொட்டை அடிப்பதாக இருந்தால் பிளேட், ரேசர் ஆகியவை ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.

குழந்தையின் தலையில் எந்த காயமும் இல்லாதபடி, மிக சிறந்த, தேர்ந்த மொட்டை அடிக்கும் நபரிடம் உங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க சொல்லி அழைக்கலாம்.

வெப்ப காலங்கள், மிதமான வெப்ப காலங்களில் மொட்டை அடிக்கலாம்.

குழந்தைக்கு மொட்டை அடிக்கும் முன் உணவுக் கொடுங்கள். பசியோடு குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டாம். குழந்தைகள் பலர் அழுவதால் சிறிது பிரேக் விட்டு மொட்டை அடிக்கலாம்.

குழந்தைக்கு காற்று போகும்படியான சௌகரியமான உடைகளை அணிந்துவிடுங்கள்.

மொட்டை போட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?

வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைக்கலாம்.

தலையை போட்டு தேய்க்காமல், மெதுவாக டவலால் ஒத்தி எடுங்கள்.

மொட்டை போட்டவுடன் தலையில் வெண்ணெய் அல்லது தயிர் பூசி, அதன் பிறகு சந்தனம் பூசலாம். எரிச்சலைக் குறைக்கும்.

சிறிது மஞ்சளும் சந்தனமும் சேர்த்துப் பூசலாம். மஞ்சள் கிருமி நாசினி, சந்தனமும் குளிர்ச்சியைத் தரும்.

மொட்டை அடித்து ஓரிரு வாரம் வரை ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.

மொட்டை அடித்த பிறகான பராமரிப்பு

1. உணவு

மொட்டை அடிக்கும் முன்பும் அடித்த பின்பும் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும்

பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்கள் கொடுக்கலாம்.

இரும்பு சத்து உணவுகள், விட்டமின் சி உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிக மிக முக்கியம்.

பூசணி கூழ், பரங்கிக்காய் கூழ், சக்கரைவள்ளிகிழங்கு கூழ், பப்பாளி, ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள் ஆகிய சிறந்தவை.

பிரவுன் அரிசி புட்டு, ராகி புட்டு கொடுக்கலாம்.

2. எண்ணெய்

தினமும் தலையில் எண்ணெய்த் தடவுங்கள்.

மண்டைத்தோலுக்கு எண்ணெய் அவசியம்.

சருமத்தை சரியான பதத்தில் வைத்திருக்கும்.

நரம்புகள் தூண்டப்படும்.

செதிலாக மாறுவது, அரிப்பு போன்றவை வராது.

ஆர்கானிக் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் தடவலாம்.

3. தலையை அலசுதல்

மைல்டான ஷாம்பு பயன்படுத்தலாம்.

நிறைய முடி இருந்தால் இயற்கை கண்டிஷனர் பயன்படுத்தலாம். முடியில் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைகரு தடவிய பிறகு 10 நிமிடங்கள் கழித்து அலசி விடலாம்.

4. உலர்த்துதல்

முடியை போட்டு தேய்க்க கூடாது. டவலால் அழுத்தித் தேய்க்க கூடாது. ஈரத்தை ஒத்தி எடுக்க வேண்டும். இல்லையெனில் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கும்.

மிருதுவான சீப்பால் முடியை வார வேண்டும்.

அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தலம்.

 

Tags :

Share via