மனிதநேயமிக்க காவலர்! உயிருக்குப் போராடிய ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றினார்

by Editor / 12-06-2021 01:09:35pm
மனிதநேயமிக்க காவலர்! உயிருக்குப் போராடிய ஒன்றரை வயது குழந்தையை  காப்பாற்றினார்

திருவாரூர் அருகே, வலிப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய ஒன்றரை வயது குழந்தையை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றிய போலீஸாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி; இவரது மனைவி மெல்மா. இந்தத் தம்பதியின் ஒன்றரை வயது மகள் சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு முத்துக்குமாரசாமி சென்றுள்ளனர்.

சன்னாநல்லூர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் பழுதாகி நின்றுவிட்டது. அந்த நேரத்தில், குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ, கார், பஸ் எதுவும் இல்லாத நிலையில், குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பெற்றோர் செய்வதறியாது நின்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் போலீஸார், ரோந்து வாகனத்தில் குழந்தை மற்றும் பெற்றோரை ஏற்றி நன்னிலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு, குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்த டாக்டர், "சரியான நேரத்தில் குழந்தையைக் கொண்டு வந்ததால் உயிரைக் காப்பாற்ற முடிந்தது" என்று கூறியுள்ளார். இதையடுத்து, தக்க சமயத்தில் வந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய போலீஸாருக்கு முத்துக்குமாரசாமியும் மெல்மாவும் நன்றி தெரிவித்தனர். இந்தத் தகவலை அறிந்த திருவாரூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் மற்றும் பொதுமக்கள், எஸ்எஸ்ஐ செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாரை பாராட்டினர்.

 

Tags :

Share via