தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் பைக்கில் சென்றபோது விபத்து!

by Editor / 15-06-2021 09:09:27am
தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் பைக்கில் சென்றபோது விபத்து!

சஞ்சாரி என்கிற நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் விஜய். அதிலிருந்து திரைத்துறைக்கு வந்ததால் 'சஞ்சாரி' விஜய் என்றே அறியப்பட்டார். 'ரங்கப்பா ஹோக்பிட்னா' என்கிற படத்தின் மூலம் 2011ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தார். 'கில்லிங் வீரப்பா', 'வர்த்தமானா' உள்ளிட்ட பல படங்களில் விஜய் நடித்துள்ளார். சஞ்சாரி விஜய் நடிப்பில் 2015-ம் ஆண்டி வெளிவந்த நானல்ல, அவளு திரைப்படம், அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம், அவருக்கு பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்றுக்கொடுத்தது. தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ச்சியாக விஜய், உதவிவந்தார். கொரோனா இரண்டாவது அலையின்போது உசிர் என்ற குழுவுடன் இணைந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கியும் உதவினார். கொரோனா குறித்து பரவிய போலிச் செய்திகளுக்கு தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் விளக்கம் அளித்தார். இந்தநிலையில், விஜய், அவருடைய நண்பர் நவீன் என்பவருடன் தெற்கு சிட்டி பகுதியில் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நிலை தடுமாறி மின்கம்பத்தின் மீது மோதினார். நவீன்தான் வண்டியை ஓட்டிச் சென்றார். நவீனுக்கு முதுகு தண்டிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு தலையிலும் தொடை பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலையில் விஜய் உயிரிழந்தார். அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து தெரிவித்த விஜயின் சகோதரர் சித்தேஷ், 'விஜய்க்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனால், அவரது உடல்உறுப்புகளை தானமாக வழங்க முடிவு எடுத்துள்ளோம். சமூகத்துக்கு உழைக்க வேண்டும் என்பதில் விஜய் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனை பூர்த்தி செய்யும் வகையில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குகிறோம்' என்று தெரிவித்தார்.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் பைக்கில் சென்றபோது விபத்து!
 

Tags :

Share via