லாரி கவிழ்ந்து 2 பேர் உடல் நசுங்கி பலி

by Staff / 03-10-2022 04:40:35pm
 லாரி கவிழ்ந்து 2 பேர் உடல் நசுங்கி பலி

சென்னை தாம்பரம் அருகே வெளிவட்ட சாலையில், கடப்பா கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கற்களின் மேல் அமர்ந்திருந்த இருவர் பலியாகினர்; ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து, கடப்பா கற்களை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று நேற்று அதிகாலை, பள்ளிக்கரணை நோக்கி வந்தது. வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே சென்ற போது, திடீரென லாரியின் வலதுபக்க முன் டயர் வெடித்தது.

இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் மேற்பகுதியில் கடப்பா கற்கள் மீது அமர்ந்திருந்த, ஆந்திராவைச் சேர்ந்த சிவாரெட்டி, 40, வரதராஜு, 45, ஆகிய இருவர், கற்களின் நடுவில் சிக்கி இறந்தனர். ஓட்டுனர் லட்சுமணய்யா, 36, உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். தகவலின்படி போலீசார் விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த இருவரது உடல்கள், கடப்பா கற்களின் நடுவில் சிக்கியதால், தாம்பரம் தீயணைப்பு வீரர்களை அழைத்து, சிறிது நேரம் போராடி மீட்கப்பட்டன. பின் அவ்விரு உடல்களையும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via