மல்லூர் அருகே கோர விபத்து - சிறுவன் பலி

by Staff / 06-10-2022 04:28:06pm
மல்லூர் அருகே கோர விபத்து - சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவருடைய மனைவி பார்வதி (30). இவர்களது மகன் கவுசி (7). அதே பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர்களான சந்துரு (30), அவருடைய மனைவி தெய்வானை (35). இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை டிரைவர் மணிகண்டன் ஓட்டி வந்துள்ளார். கோவிலுக்கு வந்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

நேற்று காலை 7 மணி அளவில் மல்லூர் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது அவர்களது கார் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் கவுசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் சிவக்குமார், பார்வதி, சந்துரு, தெய்வானை மற்றும் டிரைவர் மணிகண்டன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான கவுசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 5 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via