கயிறு இறுக்கி சிறுவன் பலி

by Staff / 06-10-2022 04:43:51pm
 கயிறு இறுக்கி சிறுவன் பலி

 மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகே உள்ள அக்ரஹாரம் தெருவில் வசித்து வரும் துரைப்பாண்டி-லட்சுமி ஆகியோரின் ஒரே மகன் விசாகன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டிற்குள் இருந்த விசாகன், துணிகள் காயப்போடும் கயிற்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு விளையாடிய போது எதிர்பாராத விதமாக அந்த கயிறு கழுத்தை இறுக்கியது.

அதனை அவிழ்ப்பதற்கு பலமுறை சிறுவன் போராடியுள்ளார். இந்நிலையில் வீட்டின் முன் பகுதியில் பூ கட்டிக் கொண்டிருந்த லட்சுமி, மகனின் முனகல் சத்தம் கேட்டு வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்துள்ளார். அப்போது கயிறு விசாகனின் கழுத்தை நன்றாக இறுக்கி அறுத்து இருந்த காரணத்தால் அக்கம் பக்கத்தாரின் உதவியோடு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகனை இழந்து தவிக்கும் தாய் லட்சுமிக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via