23 நிவாரண மையங்களில் 2274 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

by Editor / 18-10-2022 08:59:59am
 23 நிவாரண மையங்களில் 2274 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்டம் தோறும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்:

‘தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், மேட்டூர் அணையிலிருந்து இன்று 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும், அந்த நீருடன் பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகளின் தண்ணீரும் சேரும் காரணத்தால் முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2 லட்சத்து 17 ஆயிரம் கன அடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், தகுந்த ஏற்பாடுகள் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

 மேலும், மாவட்ட நிர்வாகம் குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர், தேசிய மாணவர் பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 108 பேர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த பகுதிகளில் அதிக வெள்ளம் ஏற்படுமோ அந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 23 நிவாரண மையங்களில் 2274 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், தண்ணீரால் பாதுகாப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட அமைச்சர்கள் உள்ளதோடு, அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லக்கூடாது என்றும், செல்பி எடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via