காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் 34% குறைந்துள்ளது - அமித் ஷா

by Staff / 28-10-2022 02:16:51pm
காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் 34% குறைந்துள்ளது - அமித் ஷா

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, பயங்கரவாத வழக்குகள் 34 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையில் 64 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநில மற்றும் யூனியன் பிரதேச உள்துறை அமைச்சர்கள் மற்றும் உள்துறை செயலாளர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள்சிந்தன் முகாமில் அவர் பேசினார்.

நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவை திருத்தப்பட்டு, விரைவில் நாடாளுமன்றத்தில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அமித் ஷா கூறினார். சிஆர்பிசி மற்றும் ஐபிசியை சரியான நேரத்தில் திருத்துவது தொடர்பாக பல ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார்.

அவை சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய வரைவு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேசிய புலனாய்வு அமைப்பு கூடுதல் அதிகாரங்களுடன் பலப்படுத்தப்படும்.

என்ஐஏவுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். எல்லை தாண்டிய குற்றங்களை தடுக்க மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via