ஜம்மு- காஷ்மீர் விவகாரம் :  மோடி தலைமையில்  அனைத்துக் கட்சிக் கூட்டம்

by Editor / 30-06-2021 04:10:32pm
ஜம்மு- காஷ்மீர் விவகாரம் :  மோடி தலைமையில்  அனைத்துக் கட்சிக் கூட்டம்

 

ஜம்மு காஷ்மீர்  விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
அந்த முடிவுக்கு முன்னதாகவே மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய குப்கர் பிரகடனம் வெளியிடப்பட்டு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த அணி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தின. அதன் விளைவாக கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக பின்னர் தகவல் வெளியானது.இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

Tags :

Share via