1 கோடி 75 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.- அமைச்சர் கே.என்.நேரு

by Editor / 04-12-2022 08:06:29am
 1 கோடி 75 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.- அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, “குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற உடனடி தேவைகள் குறித்து கேட்டறிந்தோம். முதல்வரிடம் அந்த விவரங்களைக் கூறி பரிசீலனை செய்து உரிய நிதியை பெற்றுத் தருவோம். திருச்சி தொட்டியம் பகுதியில் ரூ.49.35 கோடி செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துறையூர் கோம்பை பகுதியில் ரூ.75 லட்சம் மதீப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் 1 கோடி 75 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 7 லட்சம் மக்களுக்கு மட்டும் தான் 100% வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான். தமிழகத்தில் 2 ஆயிரம் ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது என்றால் மகாராஷ்டிராவில் 12 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.


 

 

Tags :

Share via