வசூல் மழை பொழிந்த தீபாவளி சிறப்பு ரயில்கள் தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் 2.96 கோடி வருமானம் ஈட்டிய தெற்கு ரயில்வே.
வசூல் மழை பொழிந்த தீபாவளி சிறப்பு ரயில்கள் தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் 2.96 கோடி வருமானம் ஈட்டிய தெற்கு ரயில்வே. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கினால் 10 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்க வாய்ப்பு. தெற்கு ரயில்வே செவி சாய்க்க கோரிக்கை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு 2.96 கோடி வருமானமாக கிடைத்துள்ளது ஆர்டிஐ முலம் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 24 ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு தீபாவளி சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்டது.
இந்நிலையில் தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான வருமானம் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு தெற்கு ரயில்வே அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில், அக்டோபர் 18 ல் இருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரயில்கள் தெற்கு ரயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரயில்வே எல்லைக்குள் இயக்கப்பட்டது.
பெரும்பாலான ரயில்கள் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களில் இருந்து இருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி எர்ணாகுளம் மங்களூர் தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து, தாம்பரம் - திருநெல்வேலி 22.43 லட்சம், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் 22.3 லட்சம், தாம்பரம் - நாகர்கோவில் 18.2 லட்சம், கொச்சுவேலி - தாம்பரம் 17.71 லட்சம், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் 17.01 லட்சம், தாம்பரம் - திருநெல்வேலி 11.56 லட்சம், சென்னை - ராமேஸ்வரம் 11.29 லட்சம், திருச்சி - தாம்பரம் 2.62 லட்சம் மற்றும் ஒரு மார்க்கத்தில் நாகர்கோவில் - பெங்களூரு 9 லட்சம், திருநெல்வேலி - தானாப்பூர் 53.8 லட்சம் ( இரு சேவைகள்) வருமானமாக கிடைத்துள்ளது. இது தவிர மற்ற மண்டலங்கள் மூலமாக இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் 1 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அனைத்து ரயில்களையும் சேர்த்து மொத்த வருமானமாக 2.96 கோடி வசூலாகி உள்ளது.
பயணிகள் பயன்பாடு: ரயில் பயணிகளின் பயன்பாட்டை பொருத்தவரையில், அதிகபட்சமாக திருநெல்வேலி - தானாபூர் ரயிலை 204 சதவீதமும், குறைந்தபட்சமாக திருச்சி - தாம்பரம் ரயிலை 9.6 சதவீத பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான சிறப்பு ரயில்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி பயணிகளால் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில் திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்ட முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் 115 சதவீதம் இருக்கைகள் பயணிகளால் நிரம்பியது. சரியான நேரத்தில் இயக்கப்படாத ஒன்றிரண்டு சிறப்பு ரயில்களை தவிர அனைத்து சிறப்பு ரயில்களும் முழுமையாக நிரம்பியுள்ளது.
இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் மற்றும் பல்வேறு வடமாநில நகரங்களுக்கு ஒன்றிரண்டு நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு 3 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. எனவே கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை மாதங்களாக விளங்கும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கினால் தெற்கு ரயில்வேக்கு பன்மடங்கு வருமானம் கிடைக்கும். மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் பல்வேறு ரயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களை கொண்டு இயக்கப்பட்டது. எனவே ரயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :