ஆங்கில புத்தாண்டு விடுமுறை சிறப்பு ரயில்கள்

by Editor / 23-12-2022 09:13:26am
 ஆங்கில புத்தாண்டு விடுமுறை சிறப்பு ரயில்கள்

பயணிகளின் வசதிக்காக ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சென்னை நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நாகர்கோவில் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் (06042) டிசம்பர் 26 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

ஜனவரி மாத ரயில்கள்

நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06020) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 1 அன்று மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06019) தாம்பரத்திலிருந்து ஜனவரி 2 அன்று மாலை 03.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 05.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

இந்த ரயில்களில் 1 குளிர்சாதன  இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு  வெள்ளிக்கிழமை (23.12.2022) காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.

 

Tags :

Share via