விபத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் வாகனம்-மீட்டு அனுப்பிய தமிழக இளைஞர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மினிவேனில் 10 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சிப்காட்டில் உள்ள வார சந்தையில் சமையலுக்குத்தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் காரைப்பகுதிக்கு வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி வேனில் வந்த எட்டு வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். அதனை கண்ட தமிழக இளைஞர்கள் விபத்தில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் சாலையில் கவிழ்ந்த வேனையும் மீட்டு தமிழக இளைஞர்கள் தூக்கி நிறுத்தி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இது சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில் தமிழக இளைஞர்களின் இந்த மனிதநேய செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Tags :