தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு:. வைகோ

by Editor / 03-08-2021 02:58:44pm
தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு:. வைகோ

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: உலக அளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 சதவீதத்திற்கும் மேலானவை தென்னிந்தியாவில் மட்டுமே உள்ளன. இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டுமே அதிகப்படியான கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடத்தக் கோரியும், பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரியும் பலர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, ஏற்கனவே 92 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் உள்ளன.

மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. வேலை ஆட்கள் இல்லாமல் தொல்லியல் துறை முடங்கிப்போய் உள்ளது. கண்டெடுக்கப்பட்ட 74,000 கல்வெட்டுகளை பிரதி எடுக்கும் பணி முழுமை பெறவில்லை. படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையாக நூல் வடிவில் வெளிவரவில்லை. தற்போது தொல்லியல் துறையில் 758 பணியிடங்கள் நிரப்பப்பபடுகிறது. இதில் ஒரு பதவி கூட கல்வெட்டுத்துறைக்கு ஒதுக்கப்படவில்லை. கல்வெட்டுத்துறை ஆய்வுகள் இல்லாமல் முழுமையான வரலாறு சாத்தியம் இல்லை. எனவே தொல்லியல்துறைக்கு தனிக் கவனம் செலுத்தி பணி நியமனங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.

ஒரு இனத்தின் தொன்மையான சமூக, பண்பாட்டு வரலாற்றை ஆய்வதற்கு கல்வெட்டு சான்றுகளே முக்கிய இடம் வகிக்கிறது. இவ்வகையில் இந்திய வரலாற்றில் தமிழக கல்வெட்டுகளுக்கு என்று சிறப்பு உள்ளது. மைசூரில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் மைசூரில் தமிழுக்கு நான்கு ஆய்வாளர்களும், சமஸ்கிருதத்திற்கு ஏழு ஆய்வாளர்களும் பணிபுரிகின்றனர். தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அங்கும் தமிழ்கல்வெட்டு ஆய்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கல்வெட்டுகளை படித்துப் பொருள் புரிந்து, வரலாற்றோடு இணைத்து நூல் வடிவில் வெளியிடும் திறமை கொண்டவர்கள் அருகி வருகின்றனர். இக்காலகட்டத்தில் போர்க்கால நடவடிக்கையில் கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தமிழ்கல்வெட்டுகளை நூல் வடிவில் வெளிக்கொணர வேண்டும். மிகக்குறைவான கல்வெட்டுகள் உள்ள சமஸ்கிருத மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழ்மொழிக்கு கொடுக்காமல் இருப்பது ஒன்றிய அரசு தமிழ் மொழியை வஞ்சிக்கும் செயலாகும். எனவே ஒன்றிய அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவில் உடனடியாக தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories