முதலமைச்சருக்கு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு பாராட்டு

by Staff / 08-01-2023 04:48:30pm
முதலமைச்சருக்கு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு பாராட்டு

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தலைவர் ஆர். பி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கோவிந்தராஜ் துணைத்தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிவேலு, துணைத்தலைவர் முருகானந்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு நன்றி தெரிவிப்பது, கிராம ஊராட்சிகள் பணி செய்ய ரூ. 2 லட்சம் அனுமதி இருந்ததை ரூ 5 லட்சமாக உயர்த்தி அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது, கிராம ஊராட்சிகளில் தற்போது வரி இனங்களான வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் இதர வரி இனங்களை கணினி மயமாக்கி இணையம் மூலம் வரிகள் செலுத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர் காத்தவராயன் நன்றி கூறினார்.

 

Tags :

Share via