கிணற்றில் பிணமாக மிதந்த கட்டிட தொழிலாளி

by Staff / 08-01-2023 04:41:27pm
கிணற்றில் பிணமாக மிதந்த கட்டிட தொழிலாளி

பல்லடம் அருகே அவரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணமாக மிதப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்க முயன்றபோது அந்த உடலுடன் சேர்த்து பாறாங்கல் கட்டப்பட்டிருந்தது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் திருச்சி கருவம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56) என்பது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் அவரை கயிற்றால் பாறாங்கல்லுடன் கட்டி கிணற்றில் தள்ளி கொலை செய்து இருக்கலாம் அல்லது அவரை கொன்று உடலை கயிற்றால் பாறாங்கல்லுடன் கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கந்தசாமி உடல் கிடந்த கிணற்றில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கந்தசாமிக்கு, சிவகாமி என்ற மனைவியும், முனீஸ்வரன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்களும், சிவகாந்த பிரியதர்ஷினி என்ற ஒரு மகளும் உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டதால் கந்தசாமி தனது மகன்களுடன் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் உள்ள சகோதரி ரேணுகா வீட்டில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கந்தசாமி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் திருச்சி சென்று சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா மற்றும் குடும்பத்தினர் கந்தசாமியை காணவில்லை என அவரது படத்துடன் நோட்டீஸ் அச்சடித்து திருப்பூர், பல்லடம் பகுதிகளில் சுவர்களில் ஒட்டி விளம்பரப்படுத்தினர். சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இந்த நிலையில் தான் நேற்று கந்தசாமி கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து போலீசார் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via