நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இளம்பெண்ணை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

by Editor / 07-02-2023 10:16:50pm
 நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இளம்பெண்ணை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித் - கிருத்திகா காதல் தம்பதியினரை பிரித்து கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் சூழலில், இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்த நிலையில், கிருத்திகா தான் கடத்தப்படவில்லை எனவும், தான் அழைத்தன் பேரில் தான் தனது பெற்றோர்கள் தன்னை வந்து அழைத்து சென்றதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வினித், கிருத்திகாவை மீட்டு தரக்கோரி _ ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த சூழலில், வழக்கு தொடர்பாக குற்றால காவல் நிலைய ஆய்வாளர் ஆஜராகி வழக்கின் தன்மை குறித்து எடுத்துக்கூறினார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 இந்த நிலையில், கிருத்திகா இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.

 அப்பொழுது, அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே கிருத்திகா மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி அவரை 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அதன் பின்னர் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், கிருத்திகாவை குற்றாலம் போலீசார் அழைத்து வந்து தமிழ்நாடு அரசு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சகி ஒன் ஸ்டாப் சென்டர் மகளிர் ஹோமில் ஒப்படைத்தனர்.

 அங்கு, கிருத்திகாவுக்கு தகுந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹோமில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே வராத வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via