கொலை வழக்கில் பிடிப்பட்ட 2 பேர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் சுட்டு பிடித்தனர்.

by Editor / 15-02-2023 08:19:58pm
கொலை வழக்கில் பிடிப்பட்ட 2 பேர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார்  சுட்டு பிடித்தனர்.

கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு நேற்று 2 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. இதில் கோகுல் என்பவர் இறந்த நிலையில் இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இன்று 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தப்ப முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22). கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோகுல் உள்பட 5 பேரை சரவணம்பட்டி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இவர்கள் அனைவருமு் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தான் கோவை 3வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று கோகுல் கையெழுத்திட்டார்.

நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட பின்னர் கோகுல் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்டார். நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள டீக்கடையில் இருவரும் சென்ற பொது ஒரு கும்பல் இருவரையும் திடீரென்று வழிமறித்து ஆயுதங்களால் தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் உயிர்தப்பி ஓடினர்.தொடர்ந்து விரட்டி சென்ற கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இருவரையும் வெட்டியது. இதனால் இருவரும் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் துடிதுடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் கோகுல் இறந்தார். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.


இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீசார் கொலையாளிகளை பிடிப்பாதற்காக கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோகுல் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அங்கு  விரைந்து சென்ற போலீசார் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காத்தப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த  5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

கோத்தகிரியில் இருந்து அவர்களை அழைத்துவரும் போது ஜோஸ்வா, கொளதம் இருவரும் மேட்டுப்பாளையம் அருகே தப்பி ஓட முயற்சிக்கும் போது இருவரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர் இருவரும் காலில் குண்டு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டு காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

Tags : கொலை வழக்கில் பிடிப்பட்ட 2 பேர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் சுட்டு பிடித்தனர்.

Share via