டீ கடைக்காரருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம்

by Staff / 16-03-2023 02:12:15pm
டீ கடைக்காரருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உணவு பண்டகங்களை காகிதத்தில் வைத்து விற்ற டீக்கடைக்காரருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கழுகுமலை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு அடங்கிய குழுவினர் நேற்று கழுகுமலை பகுதியிலுள்ள டீ கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் பலகாரங்களை காகிதத்தில் வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. டீக்கடையில் பொதுமக்களுக்கு பலகாரங்களை இலையில் வைத்துதான் கொடுத்து விற்பனை செய்ய வேண்டும் என கடைக்காரருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து இதே தவறை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என கடைக்காரருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் அறிவுறுத்தல் தொடர்ந்து கழுகுமலை பகுதியிலுள்ள அனைத்து டீக்கடைகள், ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது, உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் கடைகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பண்டங்களை காகிதத்தில் வைத்து விற்பனை ெசய்யக்கூடாது. உணவு பொருட்கள் தயாரிக்கும் இடங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

 

Tags :

Share via