விசாகப்பட்டினத்தில்மேம்பாலம் இடிந்து கார் மீது விழுந்தது; 2 பேர் உடல் நசுங்கி சாவு
ஆந்திரப்பிரதேசத்தில் கட்டுமானப்பணியில் இருந்த பறக்கும் மேம்பாலம் இடிந்து கார் மீது விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
விசாகப்பட்டினம் நகரில் அனகாபள்ளி பகுதியில் சாலையில் பறக்கும் மேம்பாலம் கட்டுமான பணி ஒன்று நடந்து வருகிறது. இந்த சாலையானது கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் கீழே சென்று கொண்டிருந்த கார் ஒன்றும் லாரி ஒன்றும் சிக்கி கொண்டன.
இதுபற்றி தகவல் அறிந்து துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரவானி தலைமையிலான போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி சரியாக எங்களுக்கு தெரியவில்லை. விசாரணை நடத்த இருக்கிறோம். 5 பேரை இதுவரை மீட்டு காப்பாற்றியுள்ளோம் எனக் கூறினர். இறந்தவர்களில் ஒருவர் சதீஷ்குமார் (வயது 35) நஹேரி புரத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் சுஷாந்த் மொகந்தி (வயது 38). காரில் இருந்தவர்களில் இருவரின் மனைவியும் மீட்கப்பட்டுள்ளனர். காரில் இறந்து கிடந்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.உள்ளூரில் உள்ள அம்மன் கோவிலில் சாமி தரிசனம் முடித்து இவர்கள் வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கினார்கள். இந்த விபத்தால் வாகனப் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தரமற்ற பொருட்களைக் கொண்டு மேம்பாலம் கட்டப்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டியிருக்கும் இடது கம்யூனிஸ்ட், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
Tags :