திருவாரூர் மருத்துவமனையில் மகப்பேறு,  குழந்தைகள் நல தீவிர சிகிச்சை மைய கட்டிடம்

by Editor / 07-07-2021 05:27:07pm
திருவாரூர் மருத்துவமனையில் மகப்பேறு,  குழந்தைகள் நல தீவிர சிகிச்சை மைய கட்டிடம்



அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், 70,000 சதுர அடி பரப்பளவில், 250 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்னர், மையத்தின் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்புதிய கட்டடத்தில், மகப்பேறு மருத்துவத்திற்கு 200 படுக்கைகளும், சிசு தீவிர சிகிக்சைக்காக 50 படுக்கைகளும், என மொத்தம் 250 படுக்கைகள் உள்ளன. தரைத்தளத்தில் புறநோயாளிகள் பிரிவு, பிரசவத்திற்கு முன் மற்றும் பின் கவனிப்பு பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவு, அலுவலக அறை போன்ற அறைகளும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவுகளும், அறுவை சிகிச்சை அரங்குகள், உபகரணங்கள் சேமிப்பு அறைகள் போன்ற அறைகளும், இரண்டாம் தளத்தில் பரிசோதனை அறை, இரத்த சேகரிப்பு மையம், மருத்துவர் மற்றும் செவிலியர் அறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இம்மையத்தில் உள்ளன.
இதன்மூலம் இம்மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சுமார் 500 முதல் 600 பிரசவ தாய்மார்களும், 250 சிசுக்களும் உள்நோயாளிகளாக பயனடைவார்கள்.
அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி முத்தமிழறிஞர் கலைஞரால் 2010-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவக் கல்லூரி 100 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் மற்றும் கல்லூரி மருத்துவமனை 550 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை, குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை, மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தை சிகிச்சை ஆகிய சிகிச்சைகளுக்காக மொத்தப் படுக்கை வசதியானது 1270 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் அனைவருக்கும் (2334 நபர்களுக்கு) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப. காயத்ரி கிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் விமலா பிரபாகரன் உடனிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், புதுடில்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பூண்டி கே. கலைவாணன், துரை சந்திரசேகரன், கே. மாரிமுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ப. காயத்ரி கிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ஜோசப் ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 

Tags :

Share via