கொரோனா 3வது அலை: ஒரு நாளைக்கு  ஒரு லட்சம் பேர் பாதிக்கும் ஆபத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

by Editor / 17-07-2021 04:29:16pm
கொரோனா 3வது அலை: ஒரு நாளைக்கு  ஒரு லட்சம் பேர் பாதிக்கும் ஆபத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்


இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) தொடங்கும். ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி பேராசிரியர் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 98 ஆயிரம் வரை பதிவானது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2வது அலை பரவ தொடங்கியது.
கொரோனா 2வது அலை மே மாதம் உச்சத்தை தொட்டது. அப்போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 4 லட்சத்து 14 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது 2வது அலை குறைய தொடங்கி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா 3-வது அலை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மற்றும் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன.
இந்த ஆய்வில் கொரோனா 3-வது அலை உருவாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். தொற்று நோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா கூறியதாவது:-
இந்தியாவில் அடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ளது. கொரோனா 3-வது அலையின்போது தினமும் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டால் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே 3-வது அலையின் போதும் ஏற்படும்.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து 3-வது அலை ஏற்பட்டால் நிலைமை மோசமாக இருக்கும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் 3-வது அலை மிகவும் கடுமையாக காணப்படும். ஆனாலும் 2-வது அலை போல கடுமையானதாக இருக்காது.
கூட்டம் கூடுவதை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல் போன்றவை மூலமாகவும் 3-வது அலையை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் சுற்றுலா செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
3-வது அலையை எதிர் கொள்ள தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட் தடுப்பூசி திட்டம் இருக்க வேண்டும்.
தடுப்பூசிக்கு பின்பு நோய் தொற்று பரவுவது பற்றிய ஆய்வில் 9.8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இறப்பு 0.4 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் இருப்பதால் அடுத்த 100 நாட்களும் நமக்கு மிகவும் முக்கியமானவை. இந்த 100 நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால்தான் 3-வது அலை வருவது குறித்த கேள்வி எழுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உலகம் 3-வது அலையை நோக்கி நடைபோட்டு வருகிறது.3-வது அலை வந்தால் அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டு மக்கள் வைரசால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.
ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு திறனை நாம் இன்னும் பெறவில்லை. தடுப்பூசி திட்டத்தால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.மேலும் நாம் இன்னும் முழுமையாக தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. எனவே தீவிர தடுப்பூசி திட்டத்தை தொடங்கி உள்ளோம். அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடிய 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.இதன் மூலம் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும். ஆனால் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் முழுமையாக பின்பற்றினால் 3-வது அலை தாக்குவதை தடுக்க முடியும். அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு தடுப்பூசி திட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள போதிலும் சில பகுதிகளில் பாதிப்பு தொடர்ந்து கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
73 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றாததே இதற்கு காரணம். முகக்கவசம் அணிவது வெகுவாக குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
முகக்கவசம் அணிவதை நமது வாழ்வின் புதிய வழக்கமாக கடைபிடிக்க வேண்டும். மேலும் 2 அடி சமூக இடைவெளி மேற்கொள்வதையும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via