கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்புத் துறையினர் போலீசார்
திருநெல்வேலி சிங்கத்தாகுறிச்சி பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் மாடசாமி (70) என்பவர் கடந்த சில தினங்களாக செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். நேற்று கருங்குளம் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே இருந்த கிணற்றுக்குள் மேற்படி முதியவர் தவறி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ராதாகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் சாமிதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று, மேற்படி கிணற்றில் விழுந்த முதியவரை ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்படி செய்துங்கநல்லூர் காவல்துறையினர் கிணற்றில் விழுந்த முதியவரை பத்திரமாக மீட்டு அவருடைய மகனான திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி கிணற்றில் விழுந்த முதியவரை மனிதநேயத்துடன் துரிதமாக செயல்பட்டு உடனடியாக காப்பாற்றி உரியவர்களிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர் மற்றும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
Tags :