குடிக்க தண்ணீர் இல்லை - கனிமொழி எம்.பி. வாகனத்தினை வழிமறித்து முறையிட்ட பெண்கள்

by Admin / 12-07-2023 11:50:59pm
குடிக்க தண்ணீர் இல்லை - கனிமொழி எம்.பி. வாகனத்தினை வழிமறித்து முறையிட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் உயர் மட்ட பால  அமைக்கும் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி., சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து கழுகுமலை பேரூராட்சியில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகளையும் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும் தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியிலும் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதற்கிடையில் கழுகுமலையில் நடைபெற்ற  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. காரில் சென்ற போது, வானரமுட்டி கிராமத்தில் அவரது வாகனத்தினை வழி மறித்த பெண்கள், தங்கள் பகுதியில் குடிநீர் வரவில்லை என்றும், இதனால் குடிக்க தண்ணீர் இல்லமால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும், எனவே தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று முறையிட்டனர். வானரமுட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி எம்.பி தெரிவித்தார்.  அவருடன் அமைச்சர் கீதாஜீவன் உடனிருந்தார்.   குடிக்க தண்ணீர் இல்லை - கனிமொழி எம்.பி. வாகனத்தினை வழிமறித்து முறையிட்ட பெண்கள்
 

Tags :

Share via

More stories

Logo