ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால்.....

by Admin / 30-07-2023 04:48:39pm
ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால்.....

*ஆடிமாதம்*

 

*சிறப்புமிக்க அம்மன் கோவில்கள்*

 

*திருவேற்காடுஶ்ரீ கருமாரி அம்மன*

 

 

*திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர். அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது. பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது. பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்*

*கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது. நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.  இந்த கருமாரி யார்ப நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்ப அதற்கு ஒரு புராண கதை உள்ளது*

*துவாபரயுகம்*

கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.  தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான். தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.  ‘கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்’ ‘தன் தங்கையின் பிள்ளை தன்னைக் கொல்வதா?’ என்று ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் ,கம்சன்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான். ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன. தேவகியின் எட்டாவது கர்ப்பம். அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன். அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள். அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா எனும் சக்தி. தேவகிக்குக் குழந்தை பிறந்தது*

*இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது. யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது. அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது. குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான். பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான். பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என அசரீரி அறிவித்திருந்தது*

*இருந்தும் கம்சன், ‘உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்’ என வானதிரச் சிரித்து வாளை ஓங்கினான் வெட்ட*

*அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.  ‘அடேய் ஆத்திரக்காரா. கருமாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா! உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு’ என்று சொல்லி மறைந்தது*

*கருமாறி விட்டதை உணர்ந்த கம்சன் கலக்கத்துடன் ‘கருமாறி’ என்றான். அக்கணமே ஆகாயம், பூமி அனைத்தும் ‘கருமாரி, கருமாரி’ என்று அழைக்கத் தொடங்கின. இப்படித்தான் கருமாரி உருவானாள். அசுரரை அடக்க, அன்னை சக்தி கருநீல நிறத்தில் பயங்கரமான உக்கிர உருவம் எடுத்தாள். திரிசூலம் ஒன்றைத் தன்முன் நட்டினாள். அன்னையின் உக்கிரம் தாங்காமல், அல்லல் விளைவித்த அசுரர்கள் அடங்கி ஒடுங்கினர்*

உக்கிர சக்தியை மகாவிஷ்ணு சாந்தப்படுத்தி, ‘கருமாரி.... உலக மக்கள் உய்வதற்கு உன் கடைக்கண் அருட்பார்வையே போதும். தலை காட்டி, உடல் மறை...’ என உள்ளன்போடு உரைத்தார்.  கருமாரி புன்முறுவலுடன் தலைகாட்டி, தன்னிலை மறைத்தாள். ஞாலத்து மக்கள் நாளும் வந்து வழிபட, எப்போதும் போல் ஓர் அழகிய வடிவமுடனும் எழுந்தருளினாள். மகாவிஷ்ணு சாந்தப்படுத்திய கருமாரி உருவம் நாரணி (நாராயணனின் பெண் வடிவம்) என்றும் கிருஷ்ணமாரி என்றும் அழகிய வடிவம் சிவை என்றும் (சிவனின் பெண் வடிவம்) அறியப்பட்டது. 

காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய இந்த நிலையில் கண்டு செந்தமிழால் போற்றித் துதித்தார். 

அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில். பவுர்ணமி தினத்தில் பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில், இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. 

காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள். ‘அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது. இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன். மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன் கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன். அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும். பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.’ அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின. 

வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது. இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது. 

புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன*

புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று, அன்னையை அடிபணிவோருக்கு அபயம் அளிக்கிறது. புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள். கருணையே வடிவாய் இருந்த கருமாரித் தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் யாவற்றையும் விரும்பிய வண்ணமே அருளும் அன்னையவள் நம் கருமாரி ஆவாள். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கை அமையும்*

மொத்தம் 12 வாரங்கள் திருவேற்காடு ஆலயத்தில் ஆடித்திருவிழா நடைபெறும்

.கே.சுகுமாா்

 

ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால்.....
 

Tags :

Share via