மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் சார்பில்  நினைவு சின்னம்: செல்வப்பெருந்தகை

by Editor / 24-07-2021 05:21:06pm
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் சார்பில்  நினைவு சின்னம்: செல்வப்பெருந்தகை

 

திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணியை நடத்தினர்
.அப்போது, காவல்துறையினர் தடியடி நடத்தி, அவர்களை விரட்டியடித்தபோது பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி தப்பிக்க முயன்றனர். இதில், 17 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தோர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தொழிலாளர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, பழனி, ரூபி மனோகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


கரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு அரசியல் கட்சிகள், அமைப்புகளில் இருந்து ஐந்து நபர்கள் மட்டும் அஞ்சலி செலுத்த வர வேண்டும் எனவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வரவேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, “தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவுச் சின்னம், மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றால் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

 

Tags :

Share via