ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்: கே. எஸ். அழகிரி
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் தமிழகஆளுநா் ஆா். என். ரவியை குடியரசுத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே. எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநா் ஆா். என். ரவி திருப்பி அனுப்பியிருப்பது அவரின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. எந்த பிரச்னையிலும் ஆளுநா் அரசமைப்புச் சட்ட அதிகார வரம்புகளை மீறி தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். இதுவரை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே ஆளுநா் கிடப்பில் போட்டுள்ளாா். தமிழகத்தின் ஆளுநராக நியமனம் ஆனது முதல் தமிழக அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
Tags :