திருமணமான 2 மாதம் பெண் மரணம் உறவினர்கள் சாலை மறியல்
திருவையாறு அருகேயுள்ள மேலத்திருப்பூந்துருத்தி அற்புத மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் மகன் விவேக் (35). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கும், தஞ்சாவூர் கரந்தை சருக்கை சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த கிருபையன் மகள் மார்த்தாள் மேரிக்கும் (29) நிகழாண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அடுத்த சில நாள்களில் தாய் வீட்டுக்கு வந்த மார்த்தாள் மேரி அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில், அக்டோபர் 22 ஆம் தேதி மார்த்தாள் மேரியை உறவினர்கள் அழைத்துச் சென்று கணவர் வீட்டில் விட்டனர். இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை மார்த்தாள் மேரிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அவரை விவேக் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டினார். அங்கு மார்த்தாள் மேரியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் மார்த்தாள் மேரியின் பெற்றோர் அளித்த புகாரில், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சடலத்தை வைக்க இடம் இல்லை என ஊழியர்கள் மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டாட்சியர் சமாதானத்தையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Tags :