காரைக்காலில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

by Admin / 29-07-2021 02:22:46pm
காரைக்காலில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

 



   போலீசார் சோதனை நடத்த வருவதை எப்படியோ அறிந்துகொண்ட போலி மதுபான ஆலையில் இருந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலை பச்சூர் தில்லை நகரில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு போலியாக மதுபான ஆலை இயங்கி வருவதாக மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
 
அதன்பேரில், தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே கதவை உடைத்து அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

அங்கு பெட்டி பெட்டியாக 252 லிட்டர் போலி மதுபான பாட்டில்களும், கேன்களில் 1,100 லிட்டர் எரிசாராயமும், போலி மதுபான பாட்டில்களுக்கு பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள், லேபிள், தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை மூட்டைகளில் இருந்தன.

இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த குடோனை சோதனை செய்தபோது, போலி மதுபான பாட்டில்களை தமிழகத்திற்கு கடத்துவதற்கு தயார் நிலையில் இருந்த ஒரு வேனும், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த போலி வாகன நம்பர் பிளேட்டுகளும் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில் இந்த போலி மதுபான குடோனில் இருந்து வேனில் மதுபாட்டில்கள் காரைக்கால் அம்பாள் சத்திரம் அருகே கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வேனை சுற்றிவளைத்தனர். ஆனால் இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிரைவர், பாதி வழியிலேயே வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

அந்த வேனை சோதனை செய்தபோது அதில் ஆயிரக்கணக்கான போலி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via