ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல்: துணைத் தலைவர் கைது

by Staff / 06-11-2023 01:43:58pm
ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல்: துணைத் தலைவர் கைது

சாத்தான்குளம் அருகே பெண் ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக துணைத் தலைவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சித்திரை சகாய ராஜா மனைவி திருக்கல்யாணி (42). இவர் சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் கிராம ஊராட்சித் தலைவராக உள்ளார். துணைத் தலைவராக போலையார்புரத்தை சேர்ந்த ராபின்சன் உள்ளார்.

ஊராட்சியில் துணைத் தலைவர் கூறியவருக்கு வரி போடவில்லை என்பது தொடர்பாக தலைவர் மற்றும் துணைத்தலைவர் இடையே பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 1ம்தேதி கிராம சபை கூட்டம் நடந்து முடிந்த நிலையில் வந்து தீர்மானம் நிறைவேற்றுமாறு தலைவரிடம் துணைத்தலைவர் கூறியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணியை துணைத்தலைவர் ராபின்சன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி அளித்த புகாரின்பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் முகம்மது ரபீக் வழக்கு பதிந்து துணை த்தலைவர் ராபின்சனை கைது செய்தார்.

 

Tags :

Share via