சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 8½ பவுன் நகை பறிப்பு

by Admin / 29-07-2021 04:46:09pm
சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 8½ பவுன் நகை பறிப்பு



கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 8½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் சுசீலா (வயது 58), இவர் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் என்.ஜி.ஓ. காலனி அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுசீலா அணிந்திருந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து சுசீலா கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பெரியாழ்வார் தெருவை சேர்ந்தவர் அமுல்யா (24), இவர் நேற்று முன்தினம் இரவு தாயுமானவர் தெருவில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அமுல்யா அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து அமுல்யா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

 

 

Tags :

Share via