பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி அண்ணன்-தம்பி சாவு

by Admin / 29-07-2021 04:48:23pm
பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி அண்ணன்-தம்பி சாவு


   
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பழனியும், அவரது மனைவியும் தங்களது மகன்களை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டு வேலைக்கு சென்று வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் கவுண்டன்நாயக்கன் பாளையம் பாரதிநகரில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். அவரது மகன்கள் சத்யா (வயது 13), குமரன் (11) ஆகியோர்  பி.என்.சாலையில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 6-ம்வகுப்பு படித்து வந்தனர்.

பழனியின் மனைவியும் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பழனியும், அவரது மனைவியும் தங்களது மகன்களை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டு வேலைக்கு சென்று வந்தனர்.


 
நேற்று காலை 2 பேரும் வேலைக்கு சென்று விட்டு  மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது மகன்கள் 2 பேரும் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் மீண்டும் பணிக்கு சென்று விட்டு  இரவு  7மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் மகன்கள் 2 பேரையும் காணவில்லை.

இதையடுத்து 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கும் போது 2 பேரும் சைக்கிள் ஓட்டி பழகியதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள பாறைக்குழி அருகே  சத்யா, குமரன் ஆகியோர் ஓட்டி சென்ற சைக்கிள் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது  சத்யா, குமரனின்  சைக்கிள் நின்று கொண்டிருந்ததுடன் அவர்களது ஆடைகளும் கழற்றி வைக்கப்பட்டிருந்தது. இதனால் 2 பேரும் பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி  பலியானது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புநிலைய வீரர்கள் விரைந்து சென்று சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் சத்யா, குமரன் ஆகியோர் தண்ணீரில்  மூழ்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2 பேரின் உடல் களையும் போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று மதியம் அண்ணன்-தம்பி இருவரும் பாறைக்குழி தண்ணீரில் இறங்கி மீன் பிடித்துள்ளதும், அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தன் காரணமாக தண்ணீரில் மூழ்கி பலியானதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி அண்ணன்-தம்பி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via