ஜனவரி 24 முதல் ஈரோடு - திருநெல்வேலி ரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு

by Staff / 23-01-2024 05:51:06pm
ஜனவரி 24 முதல் ஈரோடு - திருநெல்வேலி ரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு

ஈரோடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஜனவரி 24 அன்று ஈரோட்டில் இருந்த புறப்படும் திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும். இந்த முதல் சேவையை ஈரோடு ரயில் நிலையத்தில் மதியம் 2 மணிக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை  வளர்ப்பு மற்றும் பால் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். ஜனவரி 25 முதல் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய முன்பதிவு இல்லாத ரயில் செங்கோட்டையில் இருந்து நீட்டிப்பு ரயில் சேவையாக இயக்கப்படும். இந்த புதிய நீட்டிப்பு சேவைக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (16845) தினந்தோறும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.50 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். பின்பு திருநெல்வேலியில் இருந்து இரவு 08.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - ஈரோடு முன்பதிவு இல்லாத ரயில் (16846) செங்கோட்டையிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு காலை 06.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். பின்பு திருநெல்வேலியில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு ஈரோடு சென்று சேரும். இந்த ரயில்கள் திருநெல்வேலி - செங்கோட்டை பிரிவில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags :

Share via