ராஜிவ் கொலை குற்றவாளிகள்: 7 பேர் விரைவில் ரிலீஸ்?

by Admin / 04-08-2021 12:35:43pm
ராஜிவ் கொலை குற்றவாளிகள்: 7 பேர் விரைவில் ரிலீஸ்?

 



7 பேர் விடுதலை குறித்து குடியரசுத்தலைவர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருவதாகவும், முடிவு எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் ஐந்தாண்டு சட்டபடிப்புகளில் 2021-22ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் நிகழ்வினை சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டத்துறை செயலர் கோபி ரவிக்குமார், பல்கலைகழக துணை வேந்தர் சந்தோஷ் குமார், சட்டகல்வி இயக்குனர் சொக்கலிங்கம் , பதிவாளர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி..தமிழகத்தில் உள்ள 14 அரசு சட்ட கல்லூரிகள், ஒரு சீர் மிகு சட்டக்கல்லூரி, ஒரு தனியார் சட்டக்கல்லூரி என மொத்தம் 16 சட்ட  கல்லூரிகளில் 2275 ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அனுப்பும் நிகழ்வு துவங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், வரும் 26ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்துக்கு சட்ட கல்லூரி என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் சட்ட கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சீர்மிகு சட்டகல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படும் என கூறிய அவர், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தெளிவான முடிவு எடுத்திருக்க வேண்டும் என்றும்,ஆனால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டதாகவும், குடியரசுத்தலைவர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்றும், முடிவு எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் எனவும் கூறினார். 


  •  
 

Tags :

Share via