சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது.

by Staff / 24-03-2024 04:12:09pm
சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது.

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகேயுள்ள ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் ஆனைக்குட்டம் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்தார். தோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி, பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மகேஸ்வரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மகேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில், சட்ட விரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via