மூலனூர் அருகே இளம்பெண் கொலை-கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

by Admin / 06-08-2021 03:41:12pm
மூலனூர் அருகே இளம்பெண் கொலை-கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்



   
தனியாக வசித்து வந்த கந்தசாமி, தனது கள்ளக்காதலி கிருத்திகாவுடன் நெருக்கத்தை அதிகமாக்க திருநீலகண்டபுரத்தில் கிருத்திகாவின் வீடு அருகிலேயே வாடகைக்கு வீடு பிடித்து அதில் குடியிருந்து வந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் திருநீல கண்டபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. சிலை வடிக்கும் சிற்பி. இவரது மனைவி கிருத்திகா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிலை செதுக்க பொன்னுச்சாமி அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.

இதனால் கிருத்திகாவுக்கும், மூலனூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த உறவினர் சிற்பி கந்தசாமி (37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியது.
 
கந்தசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளான். ஆனால் கந்தசாமிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கந்தசாமியின் மனைவி, கந்தசாமியை விட்டு, பிரிந்து மகனுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் தனியாக வசித்து வந்த கந்தசாமி, தனது கள்ளக்காதலி கிருத்திகாவுடன் நெருக்கத்தை அதிகமாக்க முடிவு செய்தார். இதற்காக திருநீலகண்டபுரத்தில் கிருத்திகாவின் வீடு அருகிலேயே ஒரு வாடகைக்கு வீடு பிடித்து அதில் குடியிருந்து வந்தார். இதனால் கந்தசாமி வீட்டிற்கு கிருத்திகா வருவதற்கும், கிருத்திகா வீட்டிற்கு கந்தசாமி செல்வதற்கும் வசதியாகி போனது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தனர்.

இதனால் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கிருத்திகாவின் கணவர் பொன்னுச்சாமிக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இடையேயான கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. உல்லாசத்தையும் விடவில்லை.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காலையில் கந்தசாமி வீட்டிற்கு கிருத்திகா சென்றுள்ளார். அப்போது கந்தசாமிக்கும், கிருத்திகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால், கிருத்திகாவை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கிருத்திகா துடிதுடித்து இறந்தார்.

இந்த கொலை குறித்து மூலனூர் போலீசார்வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் கந்தசாமியை தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் அன்பு செல்வி (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கந்தசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கந்தசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கந்தசாமி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கிருத்திகா அடிக்கடி யாருடனாவது செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார். சம்பவத்தன்று எனது வீட்டிற்கு வந்த போதும் யாருடனோ செல்போனில் பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே அவரிடம் என்னை விட்டு விட்டு யாருடன் பேசுகிறாய் என்று தட்டிக்கேட்டேன்.

அப்போது கிருத்திகா என்னிடம் என்னை தட்டிக்கேட்க நீ என்ன என் புருசனா? என்று எதிர்த்து கேள்வி கேட்டார். இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கிருத்திகா கிரிக்கெட் மட்டையால் என்னை தாக்கினார். பதிலுக்கு நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கிருத்திகாவை குத்திக்கொன்றேன் என்றார்.

 

Tags :

Share via