அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

by Editor / 19-04-2024 12:00:17am
அண்ணாமலையார்  திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்  திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அண்ணாமலையார்  திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வெட்டிவேர் பல்லக்கில் அமர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் பன்னீர் மண்டபத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் கடந்த 13ம் தேதி மாலை விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்ததுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது நாளான இன்று அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண வண்ண பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் பன்னீர் மண்டபத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags : அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Share via