ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி

by Admin / 08-08-2021 02:38:05pm
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி

தலிபான்கள் கொண்டு வந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்களையும் தகர்த்து விட்டதாக ஆப்கானிஸ்தான் கூறி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே தலிபான்களிடம் நிம்ரோஸ் மாகாண தலைநகரம் சாரஞ்ச் வீழ்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவ்சான் மாகாண தலைநகரம் ஷெபர்கானை தலிபான்கள் கைப்பற்றினார்கள்.

2 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது.

தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. நகருக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை 6 மணி முதல் இந்த தாக்குதல் நடந்தது.

தலிபான்கள் பதுங்கி இருந்த கட்டிடங்கள் மீதும், பதுங்கு குழிகள் மீதும் குண்டு வீசப்பட்டது. அவர்கள் வந்த வாகனங்கள் தகர்க்கப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் கொண்டு வந்த 100 -க்கும் மேற்பட்ட வாகனங்களையும் தகர்த்து விட்டதாக ஆப்கானிஸ்தான் கூறி உள்ளது. அரசு படைகளின் திடீர் தாக்குதலால் தலிபான் பயங்கரவாதிகள் நிலைகுலைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரில் உள்ள ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் விரட்டி அடிக்கும் வகையில் ஆங்காங்கே தரைப்படைகள் புகுந்துள்ளன. அவர்களுக்கும், தலிபான்களுக்கும் இடையே தெருக்களில் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள லஷ்ககார் நகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீதும் விமான தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பாகிஸ்தானை சேர்ந்த 30 பயங்கரவாதிதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via