பிரதமர் மோடி கன்னியாகுமரி தேவி பகவதி அம்மன் திருக்கோவில் தரிசனம் செய்தார்

by Editor / 31-05-2024 12:12:35am
பிரதமர் மோடி கன்னியாகுமரி தேவி பகவதி அம்மன் திருக்கோவில் தரிசனம் செய்தார்

கன்னியாகுமரி:பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது பிரசாரம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் முடிவடைந்த போது அவர் தியானம் மேற்கொண்டார்.அதேபோல் தற்போதும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவர் கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார்.இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வந்தார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.  அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கிய மோடி.பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி, அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.அங்கு முதலில் விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.வருகிற 1-ந்தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்து பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவதால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.ஜூன் 1-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு வருகிறார்கள்.டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் கன்னியாகுமரியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். கடலோர காவல் படையினரும், கப்பல் படையினரும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ராணுவ கப்பலில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : பிரதமர் மோடி கன்னியாகுமரி தேவி பகவதி அம்மன் திருக்கோவில் தரிசனம் செய்தார்

Share via