மும்பை: தடுப்பூசி போட்டவர்களுக்கு ரெயில் பாஸ் வழங்கும் பணி தொடங்கியது
பயணிகளின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு ‘கியூ.ஆர்.’ கோடு அடிப்படையிலான பாஸ் வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.
அவ்வகையில், தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்ட பொதுமக்கள், வரும் 15ம் தேதி முதல் மும்பை புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார்.
இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டது தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காக ஒரு ஆப் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், பொதுமக்கள் அந்த ஆப் வாயிலாகவோ அல்லது ரெயில் நிலைய அலுவலகங்களுக்கு சென்று நேரடியாகவோ பாஸ்களை பெறலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு புறநகர் ரெயிலில் பயணம் செய்வதற்கான பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
இதனால் ரெயில் நிலையங்களில் பாஸ் பெறுவதற்காக பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு ‘கியூ.ஆர்.’ கோடு அடிப்படையிலான பாஸ் வழங்கப்படுகிறது. பயணிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Tags :