சுடுகாட்டில் வேன் உரிமையாளர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை. 

by Editor / 16-07-2024 10:32:16am
 சுடுகாட்டில் வேன் உரிமையாளர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் மாடசாமி (38), சொந்தமாக வேன் வைத்து தனியார் மில்லுக்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்றி , இறக்கி வந்துள்ளார். மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகா ஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமி இருசக்கர வாகனம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாடசாமி உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சுடுகாட்டில் எரியூட்டும் இடத்தில் மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாள் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags : கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் வேன் உரிமையாளர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை 

Share via