45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

by Editor / 24-09-2024 11:54:54pm
 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   ஊக்கத்தொகை வழங்கினார்.

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   ஊக்கத்தொகை வழங்கினார்.இதுகுறித்து  அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.09.2024) முகாம் அலுவலகத்தில், ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்த்தில் இம்மாதம் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி. வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.


தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில், பல்லவர் காலச் சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மேலும், சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் தடைபெறும் சதுரங்க போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொரையினை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில், ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்த்தில் செப்டம்பர் 10 முதல் 23 வரை நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்க மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்குானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் உயரிய ஊக்கத்தொகையாகவும், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையும், என மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தி அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலளார் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, செஸ் விளையாட்டு வீரர், விராங்கனைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via