குழந்தைப்பேறு அருளும் திருவோண விரதம் 

by Writer / 16-08-2021 05:06:04pm
குழந்தைப்பேறு அருளும் திருவோண விரதம் 

 


தசாவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்றாகும். இந்த அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்ததால் தான் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி.


27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் 'திரு' என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.


திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும். இந்த திருவோண விரதம் ஒருமுறை இருந்தால் கூட போதும் என பெரியோர் கூறுகின்றனர்.


திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும். 

---சிவமைந்தன் 

 

Tags :

Share via