துபாயில் சிக்கிக் கொண்டுள்ள தனது மகனை மீட்டுத் தரக்கோரி தாய் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

by Editor / 01-04-2025 10:32:39pm
துபாயில் சிக்கிக் கொண்டுள்ள தனது மகனை மீட்டுத் தரக்கோரி தாய் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் மகன் வெளிநாடு சென்ற நிலையில் 15 நாட்களுக்கு மேலாக தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் தான் கணவனை இழந்த நிலையில் தனது 27 வயது மகனான செல்வ கிருஷ்ணனை வெளிநாட்டில் வேலைக்காக ரூபாய் 2 லட்சம் தனியார் ஏஜென்ட் வாயிலாக கட்டி துபாய் நாட்டிற்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக அனுப்பி உள்ளார். 

செல்வகிருஷ்ணன் ஏசி மெக்கானிக்கல் வேலைக்காக சென்று நிலையில் துபாயில் நிறுவனத்தில் வேறு வேலை கொடுத்ததாகவும் மேலும் அதனை செய்ய வற்புறுத்தி தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வேலை பார்த்து வந்ததற்கான ஊதியம் வழங்கப்படாமல் வேலைப்பளு நெருக்கடிகள் கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து தங்களது ஏஜென்டிடம் தெரிவித்த நிலையில் முறையான பதில் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக வெளிநாட்டில் செல்வகிருஷ்ணன் உடன் பணிபுரியும் தமிழக இளைஞர்கள் இணைந்து வீடியோ ஒன்று வெளியிட்டனர். இதனையும் சுட்டி காட்டிய நிலையில் அந்த வீடியோவில் தாங்கள் எங்கு சிக்கி கொண்டு உள்ளதாகவும், தங்களை ஏஜென்ட் உரிமையாளர்களும், நிர்வாக உரிமையாளர்களும் மிரட்டுவதாகவும், ஊதியம் கொடுக்காத நிலையில் பிச்சை எடுத்து சாப்பிடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவனது உணவு தேவைக்காக தான் இங்கிருந்து பணம் அனுப்பி வந்ததாகவும் கூறிய நிலையில் கடந்த 15 நாட்களாக செல்வகிருஷ்ணன் தனக்கு தொடர்பு கொள்ளாதது தனக்கு மிகவும் அச்சமாக உள்ளதாக மாரியம்மாள் கூறுகிறார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து தனது மகனை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags : துபாயில் சிக்கிக் கொண்டுள்ள தனது மகனை மீட்டுத் தரக்கோரி தாய் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Share via

More stories