திருவண்ணாமலை பகுதி லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமிக்கு 20 முதல் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி வருகின்ற 11 ஆம் தேதி இரவு 8:47 மணிக்கு தொடங்கி மறுநாள் 12 ஆம் தேதி 10. 37 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இரண்டு நாட்கள் தொடர்ந்து சித்ரா பௌர்ணமி இருப்பதால் அதிக அளவு பக்தர்களின் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வருகின்ற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் மும்மரமாக செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் ஆய்வாளர் அமல்ராஜ் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு போலீசார் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை நகரில் உள்ள லாட்ஜ், தங்கும் விடுதி, ஹோம் ஸ்டே உள்ளிட்ட பல்வேறு விடுதிகளில் 4 குழுக்களாக பிரிந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய இந்த திருவண்ணாமலையில் அசம்பாவிதங்களில் தடுக்கும் பொருட்டு லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் ஏற்கனவே தங்கி உள்ளவர்களின் விபரங்கள் மற்றும் சித்ரா பௌர்ணமி ஒட்டி லாட்ஜில் புக்கிங் செய்யப்பட்டவர்கள் விபரம் அவர்களுடைய ஆதார் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என பல்வேறு கட்ட பரிசோதனைகளையும் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
Tags : திருவண்ணாமலை பகுதி லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை.