காவலர் தலையில் கார் சக்கரம் ஏறியதில் பலி

by Editor / 28-08-2021 01:09:01pm
காவலர் தலையில் கார் சக்கரம் ஏறியதில் பலி

சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் ஆணி தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார்(24). இவர் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் இரு சக்கர வாகனத்தில் மேற்கு மாம்பலம் கோவிந்தன் ரோடு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தார்.

பெட்ரோல் பங்க் அருகே இரு சக்கர வாகனத்தை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக மனோஜ்குமார் அதில் இருந்து கீழே தவறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று மனோஜ்குமார் தலை மீது ஏறி இறங்கியது. அங்கு இருந்த ஒருவர் படுகாயம் அடைந்த மனோஜ்குமாரை உடனடியாக தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மனோஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் பிடித்து கிண்டிபோக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனி 4 வது தெருவை சேர்ந்த ஞானசம்பந்தம்(47) என்பது தெரியவந்தது. இண்டீரியர் டெக்ரேசன் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசம்பந்ததை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via