அமெரிக்காவில் 3 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தாய் பலி

by Admin / 15-03-2022 01:20:20pm
அமெரிக்காவில் 3 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தாய் பலி

அமெரிக்காவில், சிகாகோ புறநகர் பகுதியான டார்டன் என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இதன் அருகே ஒரு குடும்பத்தினர் தங்களது காரை நிறுத்தி வைத்திருந்தனர்.

பின் சீட்டில் 3 வயது சிறுவன் அமர்ந்திருந்தான். காரின் முன்புறம் அவனது பெற்றோர்கள் உட்கார்ந்திருந்தனர்.
 
காருக்குள் சிறுவன் தந்தையின் கைத்துப்பாக்கி இருந்தது. இதை பார்த்த சிறுவன் அதை பொம்மை துப்பாக்கி என்று நினைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் விசையை தெரியாமல் அழுத்திவிட்டான். இதில் துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த குண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த அவனது தாய் பென்னட் (வயது 22) கழுத்தில் பாய்ந்தது.

துப்பாக்கி குண்டு துளைத்ததில் மயங்கிய அவரை சிகாகோவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பென்னட் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி வைத்திருக்க அவர் உரிமம் பெற்றுள்ளாரா என்பது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

 

Tags :

Share via